காதலுக்காக






ஒரு செங்கல் கூட 
கைவசம் இல்லை.
கட்டிடம் கட்டும் 
உத்தேசமும் இல்லை..
ஒரு கவிதை கூட 
எழுதத் தெரியவில்லை..
வார்த்தைகள் கைக்கு அகப்படாமல் 
கண்ணாமூச்சி ஆடுகின்றன..
இதயம் துடிப்பது கூட 
அதன் போக்கில்தான்..
எதற்காகவும் தவித்து
பழக்கம் இல்லை..
ஆனாலும் பெண்ணே..
உன்னைச் சந்தித்த பின்தான்
இதையெல்லாம் யோசித்தேன்..
முன்னாள் காதலர்களின் 
அவஸ்தை பற்றி..
மகால்கள் பற்றி..
காவியங்கள் பற்றி..
எதுவுமே கற்றறியாமல் 
காலங்கழித்த என் அறியாமை
இப்போதுதான் உறுத்துகிறது..
அவர்களை எல்லாம் 
சகாப்தமாக்கி விட்டு 
என்னை மட்டும் 
சூனியமாக்கி விட்ட 
பேரன்பே..
இன்னொரு பிறவி தா..
எனக்கு மட்டும்..
சரித்திரத்தில் நிலைக்க 
ஒரு சாகசத்துடன்!

Comments